சமுக வலைத்தளங்களுக்கான விதிகளை மீறி, பயனாளர்களின் தகவல்களை கசியவிட்ட பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்துக்கு பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை கொடுத்ததாக பேஸ்புக் நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதற்கு பதிலளித்த பேஸ்புக் நிறுவனம், ‘பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் நிறுவனத்துக்கு அளித்தது உண்மைதான். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’ என தெரிவித்தது.
இந்த புகாரின் முழு விவரம் அறிய அமெரிக்க வர்த்தக ஆணையம் கடந்த மார்ச் மாதம் விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில், கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கொண்ட, தனிப்பட்ட நபர்களின் தகவல்களை கசிய விடுவதில்லை எனும் உடன்பாட்டுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பேஸ்புக் நிறுவனத்துக்கு சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானத்தில் 9% ஆகும். மேலும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இவ்வளவு பெரிய அபராத தொகையை செலுத்த இருப்பது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.